பெங்களூர் நீதிமன்றத்தை கலக்கிய சுதாகரன்
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான மாஜி வளர்ப்பு மகன், சிவாஜி கணேசன் வீட்டு மருமகன், சின்னஎம்.ஜி.ஆர். சுதாகரன் வழக்கமான தனது சன் கிளாஸ், ஷெர்வானியில் வந்து கலக்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்போலில்லாமல் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க வருவதைப் போல படு பந்தாவாக வந்தார்.
அவரது காருக்கு முன்னாலும் பின்னாலும் அவரது அடிப்பொடிகள் கார்களில் வந்தனர். நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள்சூழ படு கெட்-அப்பில் வந்த சுதாகரனைப் பார்த்து, நீதிமன்றத்தில் இருந்தவர்கள் மூக்கில் விரல் வைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா- உ.பி. சகோதரி சசிகலா ஆகியோர் வருவார்கள் என்று எதிர்பார்த்து வந்திருந்த பத்திரிக்கைபோட்டோகிராபர்கள், சுதாகரனை சுட்டுத் தள்ள, மிக மகிழ்ச்சியாய் போஸ் தந்தார் சுதாகரன்.
இந் நிலையில் பெங்களூரில் சின்ன எம்ஜிஆர் நற்பணி மன்றத்தின் (இப்படி ஒரு மன்றத்தையும் சுதாகரன் நடத்தி வருகிறார்)செயலாளர் இரா.கணபதி வெளியிட்ட அறிக்கையில்,
தொடர்ந்து சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டு (சுதாகரன் மீது ஜெயலலிதா கஞ்சா கேஸ் போட்டு, பின்னர்போயஸ் கார்டனை விட்டு ஒதுக்கி வைத்தை சொல்கிறார்) கடவுளுக்குக் கீழ்படிந்து சுதாகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சுதாகரனால் தான் மற்றவர்கள் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கை மூலம் உங்களுக்காக நான் செய்யும் தியாகத்தை பாரீர் என்று போயஸ் கார்டனுக்கு சுதாகரன் மெஸேஜ்அனுப்புவதாகத் தெரிகிறது.