நிவாரணம்-இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை
கொழும்பு:நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் பணத்தை ராணுவத்திற்கு செலவிடுவதை இலங்கை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் உதவிகள்அனைத்தும் நிறுத்தப்படும் என இலங்கை அரசை இங்கிலாந்து எச்சரித்துள்ளது.
இலங்கையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நடந்து வரும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய இங்கிலாந்துஅமைச்சர் கிம் ஹோவல்ஸ் இலங்கை வந்துள்ளார்.
நிவாரணப் பணிகள் நடந்து வரும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிவாரணப்பணிகளுக்காக அளிக்கப்பட்ட நிதியை இலங்கை அரசு ராணுவத்திற்கு செலவிடுகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கருணா குழுவினருக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் பணியையும் இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும். ராணுவத்திலும் சிறுவர்கள்சேர்க்கப்படுகிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடந்து வருகிறது. இதை உடனடியாக இலங்கை அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் உலகநாடுகளின் ஆதரவை இலங்கை இழக்க நேரிடும்.
தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு வழங்கி வரும் ரூ. 174 கோடி நிதியுதவியை இங்கிலாந்து அரசுநிறுத்த வேண்டி வரும் என்றார் ஹோவல்ஸ்.