செஞ்சி-எல்ஜியால் மதிமுக வெளிநடப்பு!!!
சென்னை:காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு போட்டி மதிமுகவும் அழைக்கப்பட்டதால் வைகோமதிமுகவின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதுதொடர்பாக இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது.
தலைமைச் செயலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு கட்சியாக கூட்டம்நடந்த கான்பரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தன.
மதிமுக (வைகோ) சார்பில் ராதாகிருஷ்ணனும், மல்லை சத்யாவும் கூட்டத்துக்கு வந்தனர்.
வந்தவர்கள் அமரப் போகையில் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த இருவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
போட்டி மதிமுகவின் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனும், அவைத் தலைவர் எல்.கணேசனும் அங்கே அமர்ந்தபடி இவர்களை ஒருபார்வை பார்க்க, நீயா? நீயா? நீயா? என்று மனசுக்கு ஏதோ எதிரொலித்திருக்கும்போல.
அடுத்த நிமிடமே ராதாகிருஷ்ணனும் சுதாரித்துக் கொண்டு நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறியபடி கிளம்பி வெளியே வந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் இருவரும் பேசுகையில், தமிழக அரசு உடனடியாக மறு ஆய்வு மனுவத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கும் நிவாரணம்கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
இக்கூட்டத்திற்கு எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அழைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தே வெளிநடப்புச் செய்தோம் என்றனர்.