இந்தியா-பாக் ரயிலில் பயங்கர குண்டு வெடிப்பு:66 பேர் பலி-நூற்றுக்கணக்கானோர் காயம்
பானிபட்:இந்தியா-பாகிஸ்தான் இடையில் இயக்கப்படும் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று பயங்கர குண்டு வெடித்து தீப் பிடித்துக் கொண்டதில் 66பயணிகள் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
டெல்லியிலிருந்து பாகிஸ்தான் எல்லை நகரமான அட்டாரிக்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில், கடந்த 2004ம் ஆண்டு முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 10.40 மணிக்கு சம்ஜுதா எக்ஸ்பிரஸ் லாகூருக்குக் கிளம்பியது. 610 பயணிகள் அதில் இருந்தனர். பெரும்பாலானவர்கள்பாகிஸ்தானியர்கள் ஆவர்.
நள்ளிரவுக்கு மேல் 1.50 மணியளவில் ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே ரயில் போய்க் கொண்டிருந்தபோது ரயிலின் கடைசிப் பெட்டியில்பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் கடைசி 2 பெட்டிகளில் பலத்த சேதமடைந்தன, தீப்பிடித்து எரிந்தன.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்தபடி உயிரைக் காக்க கீழே குதித்தனர். தீயணைப்புப் படையினருக்குத் தகவல்தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.
நெடு நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பெட்டிகள் முழுவதும் எரிந்திருந்தன. சிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 66பயணிகள் கரிக்கட்டையாக எரிந்து போயிருந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டினர்தான்.
காயமடைந்த பயணிகள் பானிப்பட் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சூட்கேஸ்களில் திரவ வெடிபொருளைக் கொண்டு வந்து அதன் மூலம் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நடத்தியிருப்பது முதல் கட்ட ஆய்வில்தெரிய வந்துள்ளது. 3 சூட்கேஸ்களில் இவற்றைக் கொண்டு வந்துள்ளனர். அவற்றில் இரண்டு சூட்கேஸ்கள் ரயிலுக்குள் இருந்தது. ஒரு சூட்கேஸ்தீவானா ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பானிப்பட்மாவட்டம் சீலிடப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இணை அமைச்சர் வேலு, உள்துறைச்செயலாளர் துகல், தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் தத் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பானிப்பட்டில் நிறுத்தப்பட்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு கிளம்பிச் சென்றது.