கேரள, ஆந்திர, கர்நாடக ஆறுகளின் உபரி நீரைதமிழகத்திற்குப் பெற நடவடிக்கை-துரைமுருகன்
சென்னை:அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில ஆறுகளில் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு கோரி அந்த மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்திருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து துரைமுருகன் பேசுகையில், தேசிய நீர் வள முகமை, தென் தீபகற்ப மாநிலங்களில் உபரி நீர் அதிகம் உள்ள வடி நிலப் பகுதிகள் மற்றும் பற்றாக்குறை உள்ள பகுதிகளைக் கண்டறிந்துள்ளது.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் மகாநதி, கோதாவரி ஆகிய ஆறுகளில் உருவாகும் உபரி நீரை, கிருஷ்ணா, பெண்ணார், காவிரி, வைகை ஆறுகளுக்கு வழங்கலாம் என அது பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மகாநதி, கோதாவரி ஆறுகளில் கிடைக்கும் உபரி நீர், கிருஷ்ணா ஆற்றுக்கும், பெண்ணாற்றுக்கும் திருப்பி விடப்படும். பின்னர் பெண்ணாரிலிருந்து காவிரிக்கு கால்வாய்கள் மூலம் அது எடுத்துச் செல்லப்படும்.
இந்த இணைப்பு மூலம் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், காவிரி டெல்டா பகுதிக்கு கூடுதலாக 136.21 டிஎம்சி தண்ணீரும் கிடைக்கும்.
மற்றொன்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு. இந்த இணைப்பினால் குண்டாறு வரைக்கும் காவிரி நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும்.
உபரி நீரைப் பங்கிடுவது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு முதல்வர் கருணாநிதி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இரு மாநில நீர்வளத்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசலாம் என யோசனை தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கும் இதுபோல கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்கும் திட்டமும் அமல்படுத்தப்படும். அதன்படி முதல் கட்டமாக கோரையாற்றிலிருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய் ஒன்று அமைக்கப்படும். பெண்ணையாற்றிலிருந்து செய்யாற்றை இணைக்கும் திட்டம், தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை கருமேனியாறு வரை எடுத்துச் செல்லும் திட்டம் ஆகியவை ஆய்வில் உள்ளன.
இந்த இணைப்புகள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் என்றார் துரைமுருகன்.