சென்னை-பூட்டிய காருக்குள் 2 வாலிபர்கள் பிணம்
சென்னை:சென்னை அயனவாரத்தில் பூட்டிய காருக்குள் இரண்டு வாலிபர்கள் பிணமாகக் கிடந்தனர். காருக்குள் ஏற்பட்ட விஷ வாயுவில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அயனவாரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). ஆண்டர்சன் சாலையில் கார் பழுதுபார்க்கும் நிலையத்தை நடத்தி வருகிறார். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு, நிறுவனத்தின் சாவியை மைத்துனர் மாதவனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
ஒர்க்ஷாப்பில் மாதவனும், அவரது நண்பர் ராமுவும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரவு வேலையை முடித்து விட்டு அங்கு இருந்த மாருதி காரை ஒர்க்ஷாப்பின் உள்பக்கம் நிறுத்தி அதில் ஏறிப் படுத்துக் கொண்டனர்.
இன்று காலை 10 மணிக்கு பெருமாள் ஒர்க்ஷாப்புக்கு வந்தார். அப்போது ஒர்க்ஷாப் பூட்டப்படாமல் வெறும் ஷட்டர் மட்டும் இறக்கி விடப்பட்டிருப்பதைப் பார்த்து பார்த்து திடுக்கிட்டார்.
உள்ளே சென்ற அவர் மாருதி காரின் கண்ணாடிகள் ஏற்றி விடப்பட்ட நிலையில் உள்ளே மாதவனும், ராமுவும் படுத்த நிலையில் இருப்பதைப் பார்த்தார்.
பதறிப் போன அவர் கார் கண்ணாடியைத் திறந்து பார்த்தபோது இருவரும் இறந்து கிடந்ததை அறிந்து அதிர்ந்தார். அந்தக் கார் ஏசி பொருத்தப்பட்டதாகும். எனவே கார் ஏசி இயந்திரத்திலிருந்து விஷ வாயு கசிந்து இருவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்த மாதவனுக்கு 8 மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்ததாம். அவரது சொந்த ஊர் திருவண்ணாமலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.