மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீதுஅழகிரி ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்:3 பேர் பலி- 7 பஸ்களுக்கு தீ வைப்பு
மதுரை:முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர்.
பெட்ரோல் குண்டு வீச்சு:
அரிவாள்கள், கத்திகள், உருட்டுக் கட்டைகளுடன் தாக்குதலில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் நான்கு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கும்பல் நடத்திய தாக்குதலில் மேலும் பலர் மயக்கமடைந்தனர்.
தினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது.
யார் சிறந்தவர்?:
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே யார் சிறந்தவர் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தயாநிதி மாறன்தான் நம்பர் ஒன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.
இது கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியல் என்று பொங்கினார் ராமதாஸ்.
மு.க.ஸ்டாலினுக்கே ஆதரவு:
இந்த நிலையில், இன்று வெளியான கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், ஸ்டாலினின் கடும் போட்டியாளராக கருதப்படும் அழகிரிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியைப் படித்ததும் மதுரையில் இன்று அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.
பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பழங்காநாத்தம் உள்ளிட்ட அனைத்துப் பேருந்து நிலையங்கள் முன்பும் கூடி தினகரன் நாளிதழ்களைப் போட்டுக் கொளுத்தினர்.
மாறனுக்கு எதிராக கோஷம்:
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர்.
சாலை மறியல்-கல்வீச்சு: பஸ் எரிப்பு
சாலை மறியலிலும் அவர்கள் திடீரென குதித்தனர். அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர். போராட்டம் நடந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
வன்முறையின் உச்ச கட்டமாக மதுரை உத்தங்குடியில் உள்ள சன் டிவி அலுவலகம், தினகரன் அலுவலகம் (அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன) மீது ஒரு கும்பல் புகுந்து தாக்கியது.
தீ பிடித்த அலுவலகம்:
இதில் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து தாக்கியதால், ஊழியர்கள் நிலைகுலைந்து உயிர் தப்ப அங்கிருந்து வெளியேறி ஓடினர். இந்த சமயத்தில் அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
3 பேர் பலி:
இதையடுத்து அலுவலகம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் கோபி மற்றும் வினோத் ஆகிய உள்பட பல ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.
இவர்களில் கோபி (28) சம்பவ இடத்திலேயே பலியானார். வினோத் (27) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இந்த இருவரும் சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த அப்பாவிகள் ஆவர்.
அதேபோல, சன் டிவி நிறுவன காவலாளி முத்துராமலிங்கம் என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் சன் டிவி அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் பல பைக்குகள் எரிந்து போயின.
வன்முறையில் இறங்கிய மேயர்:
இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியது அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மேயர் தேன்மொழி தான் என்று தெரிகிறது.
தினகரன் நாளிதழ்களை தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து எரித்து போராட்டம் நடத்திய அவர் கலட்டாவிலும் ஈடுபட்டார்.
அழகிரி ஆதரவாளர்களின் இந்த வன்முறையால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கர வன்முறைகள் தொடர்பாக இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேபிள் டிவிக்கள் இருட்டடிப்பு:
மதுரையில் கேபிள் டிவிக்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. கேபிள் டிவி உரிமையாளர்களை மிரட்டி ஒளிபரப்பை அழகிரியின் ஆட்கள் தடை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
வைகை டிவி மீதும் தாக்குதல்:
அதே போல உள்ளூர் தொலைக்காட்சியான வைகை டிவி அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.
அதே போல உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய இடங்களிலும் அழகிரி ஆதரவு திமுகவினர் போராட்டங்கள் நடத்தினர்.