4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம்செய்ய முயன்ற மதபோதகர் கைது
சென்னை:4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு.
இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,
ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.
இதில் மேரியை மனநிலை சரி இல்லாதவர் என்று ஒதுக்கி வைத்து விட்டார். மற்ற இரண்டு பெண்களையும் அது போல விரட்டி விட்டார். என்னையும் சில காலமாக சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என்னை விபச்சாரத்தில் தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்.
மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி தினமும் என்னை அடித்து துன்புறுத்தினர். சில வாரங்களுக்கு முன் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி என்னை வீட்டை விட்டு விட்டிவிட்டார்.
இந்நிலையில் அவர் 5வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை தடுத்து நிறுத்தி ஜெய்மார்ட்டின் லூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய் மார்ட்டின் லூதர் மீது நடவடிக்கை எடுக்க மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் மார்ட்டின் லூதரை இன்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.