தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!
சென்னை:தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தனி நிறுவனத்துக்கு தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரி வந்தார். இதையடுத்து கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி எல்காட் (எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் அடிப்படையில் முதல்வரிடம் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து புதிய கேபிள் டிவி கட்டமைப்பு உருவாக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது இந்த கட்டமைப்புக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கம்பி வட தொலைக்காட்சி சேவையை வழங்குவது சம்பந்தமாக 11.8.2007 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.
இந்த நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இருப்பார். இவர் தவிர நான்கு இயக்குநர்களும் இருப்பார்கள். நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்திரமெளலி, எல்காட் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரே அவர்கள்.
இந்த பொதுத் துறை நிறுவனத்தில் தனியார் நிறுவனம் எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. முழுக்க முழுக்க அரசு பொதுத் துறை நிறுவனமாகவே இது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.