சீனாவில் பாலம் இடிந்து 22 பேர் பலி: வெள்ளத்தில் மூழ்கிய 45 பேர்
பெய்ஜிங்:சீனாவில் புதியதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 22 கட்டிட தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 45 பேரைக் காணவில்லை
சீனாவின் மத்திய பகுதியில் ஜெயின்டோ நதியின் குறுக்கே 1,050 அடி நீள புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இரவு பகலாக நடைபெறும் பாலத்தின் கட்டுமானப்பணியில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளாவர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக ஜெயின்டோ நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு குறைவான தொழிலாளர்களே பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்டி முடிக்கப்படாத அந்த பாலம் திடீரென்று இடிந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
பாலத்தின் தூண்களும், கான்கிரீட் பாலங்களும், ராட்சத கிரேன்களும் அவர்களை நசுக்கியதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 45 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். இவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தப் பாலத்தின் திறப்புவிழா இந்த மாத இறுதியில் நடக்க இருந்தது.