கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா
லண்டன்:இங்கிலாந்தில் நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மேட்ச் நடைபெற்றது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி தோல்வியின்றி இயற்கையின் கருணையால் டிராவில் முடிவடைந்தது.
டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 664 ரன்களை குவித்தது. கும்ளே அபாரமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை (110 ரன்கள்) அடித்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345ரன்கள் மட்டுமே அடித்தது.
இங்கிலாந்து பாலோ ஆன் பெற்றும், இந்திய அணியின் கேப்டன் டிராவிட் அவர்களை பேட்டிங் செய்ய சொல்லாமல், 2வது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.
டிராவிட்டின் இந்த முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது. பாலோ ஆன் பெற்ற இங்கிலாந்தை பேட்டிங் செய்ய வைப்பதன் மூலம், இந்த டெஸ்ட் தொடரில் மேலும் ஒரு வெற்றியை பெற இருப்பது இதனால் தவிர்க்கப்பட்டது.
2வது பேட்டிங் செய்த இந்தியா தட்டு தடுமாறி 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 500 ரன்கள் தேவை என்ற இலக்கோடு பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.
1 நாள் மீதமிருப்பதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணிய கேப்டன் டிராவிட்டின் எண்ணத்தில் மண் விழுந்தது. நிதானமாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் 5வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்து, இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
3வது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் பரிசை இந்தியாவின் அனில் கும்ளே பெற்றார். ஆட்டத்தொடர் நாயகனுக்கான பரிசு இருவருக்கு அளிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இந்தியாவின் ஜாகீர்கான் இருவருக்கு ஆட்டத் தொடர் நாயகன் பரிசு அளிக்கப்பட்டது.
இந்தத் தொடரில் ஜாகிர்கான் 18 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
21 வருடங்களுக்கு பின் முதல் வெற்றி:
இந்த வெற்றியின் மூலம் 21 வருடங்களுக்கு பின்பு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன்பு 1986ல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்தியா.
இந்திய அணிக்கு ரூ.1 கோடி:
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 1 கோடி போனஸ் அளிப்பதாக அறிவித்துள்ளது.