சேது: தமிழக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - நெடுமாறன்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில், மதவாதிகளின் நெருக்கடிக்குப் பணிந்து மத்திய அரசு தாமதம் செய்தால், உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல், நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட பட்டினிப் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டு இருக்கும் கருத்து தேவையற்றது மட்டுமல்லாது, ஜனநாயக வழிமுறைகளில் குறுக்கிட்டதும் ஆகும்.
காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியார் பிரச்சினை போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளில், உச்சநீதிமன்றத்தின் ஆணைகளை மதிப்பதற்கு முற்றிலும் தவறிய கர்நாடக, கேரள அரசுகள் மீது சிறு கண்டனமும் இதுவரை தெரிவிக்காத உச்சநீதிமன்றம், இந்தப் பிரச்சினையில் மட்டும் தலையிட்டுக் கண்டிப்பதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்குவதற்கு யார் முயற்சி செய்தாலும், அதை தமிழர்கள் ஒன்று திரண்டு நின்று முறியடிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு ஊசலாட்டத்துடன் தடுமாறுமானால், அந்த அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவிகளைத் துறந்து வெளியேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.