For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது சமுத்திர வழக்கை நீதிபதி அகர்வால் விசாரிக்கக் கூடாது: வீரமணி

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

சேது சமுத்திரம் தொடர்பான வழக்கை நீதிபதி அகர்வால் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நடக்க இருந்த வேலை நிறுத்தம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகத்தான் உண்ணாவிரதமாக மாற்றப்பட்டது. இது திமுக கூட்டணி கட்சிகளின் முடிவு. தமிழக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்றைய தினம் அரசு வழக்கம் போல் தான் இயங்கியது.

ஆனால், அன்று காலை அதிமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் தேவை இல்லாத கருத்துக்களை கூறியுள்ளார். பி.என். அகர்வால் என்ற இந்த நீதிபதி தான் ஏற்கனவே ராமர் பாலம் பகுதியில் சேதுகால்வாய் தோண்ட தடை விதித்தவர். முழு அடைப்பு தொடர்பான அதிமுக வழக்கை ஞாயிற்றுக்கிழமை சுப்ரீம் கோர்ட்டை திறந்து விசாரித்து தடை விதித்தவர்களில் ஒருவர்.

ஒரு மாநில ஆட்சியை நீக்கும் உரிமை ஜனாதிபதிக்கு மட்டும்தான் உள்ளது. அது பற்றி வழக்கு வந்தால் மட்டுமே கோர்ட்டு தலையிட முடியும், அதுவும் மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தால் கோர்ட்டு எதுவும் செய்ய முடியாது. இது அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீதிபதி அகர்வால், ஆட்சியை கலைக்க சிபாரிசு செய்வோம் என்று தமிழக அரசைப் பற்றி தேவை இல்லாமல் சட்டவிரோதமாக விமர்சித்திருக்கிறார். சட்டத்தை மீறி தவறாக நடந்திருக்கும் இந்த நீதிபதி மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 124-வது பிரிவு உள்பிரிவு 4ன் கீழ் இந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். வரம்புமீறி போகாமல் நீதிபதிகளை பாராளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துள்ளது. ஆனால், சமீப காலமாக சில நீதிபதிகள் சட்டத்துக்கு மாறாக எல்லை மீறி நடக்கிறார்கள். இதை பாராளுமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசியல் சட்டத்துக்கு எதிராக தனது உணர்ச்சிகளைக் காட்டும் நீதிபதி அகர்வால், சேது சமுத்திர திட்டம் மற்றும் ராமர் பிரச்சினை தொடர்பான எந்த வழக்கையும் விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று உச்ச நீசிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு திராவிடர் கழகம் சார்பில் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.

அதே போல நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதுவேன் என்றார் வீரமணி.

பேச்சு வரம்பு மீறியது-கி.வீரமணி:

முன்னதாக வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,

முழு அடைப்புக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் கடந்த 30ம் தேதி அளித்த தீர்ப்பை செயல்படுத்தாவிட்டால், திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் பரிந்துரைக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி அகர்வால் வாய்மொழியாக கூறியுள்ளார்.

முழு அடைப்புக்கு பதிலாக உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இந்த போராட்டங்கள் எல்லாம் திமுக கூட்டணிக் கட்சிகளின் முடிவே தவிர அரசின் முடிவு கிடையாது.

தமிழக அரசின் எல்லா அலுவல்களும் திங்கட்கிழமை வழக்கம்போல் நடந்தன. தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தனது பணிகளை வழக்கம்போல் செய்துள்ளார்.

தலைமைச் செயலாளர் உட்பட அனைவரும் அவரவர் பணிகளைச் செய்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக திங்கள்கிழமை தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் முதலில் கொடுத்த ஆணையை தமிழக அரசு மதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு நடைபெறுகிறது என்று உண்மைக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்கும்போது நீதிபதி தனது எல்லையைத் தாண்டி உள்ளார்.

அரசியல் சட்ட விதிகளுக்கு முற்றிலும் மாறாக சில தேவையற்ற கருத்துக்களை வாய்மொழியாக கூறியுள்ளார்.

மக்கள் தாமாக முழு அடைப்பு செய்யும்போது அதை எப்படி ஒரு அரசு தடுக்க முடியும். எனவே உச்சநீதிமன்றத்தின் பேச்சு வரம்பு மீறியதாகும்.

அரசைக் கலைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டா. எந்த சட்டப்பிரிவின் கீழ் என்று கூற முடியுமா.

குடியரசுத் தலைவரின் உரிமையை ஒரு நீதிபதி எடுத்துக் கொள்ளலாமா என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X