சிதம்பரம் கோவிலை அரசுடைமையாக்க திருமாவளவன் கோரிக்கை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டி எழுப்பப்பட்ட நாளிலிருந்து தமிழில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் மறைகள் ஓதப்பட்டன. தில்லை நடராஜனை வழிபட நந்தனாரும் தமிழில் பாடியபடியே தான் நுழைந்துள்ளார்.
வரலாறு இவ்வாறாக இருக்கும்போது அக்கோவில் பிராமணர்களின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட பிறகுதான் அங்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில் தமிழில் மறைகள் ஓதுவதற்கு பல போராட்டங்கள் வரலாறு நெடுகிலும் நடந்து வந்துள்ளன.
பழமை வாய்ந்த கோவில்களும், பெருமை வாய்ந்த கோவில்களும் இந்து சமய அறநிலையத்துறை அல்லது இந்தியத் தொல்லியல் துறை ஆகிய இரு துறைகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகின்றன. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும் தீட்சிதர்களின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கி வருவது வியப்புக்குரியது.
தமிழக அரசு அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்தலாம் எனச் சட்டம் இயற்றிய பிறகு, அதனடிப்படையில் இந்து அறநிலையத்துறை சிவனடியார் ஆறுமுகசாமி தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதலாம் என அனுமதி வழங்கியது.
அதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் தீட்சிதர்கள் தமிழக அரசின் சட்டத்தையும், நீதிமன்றத் தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடராஜர் கோவிலை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நந்தனார் நுழைந்து வழிபாடு நடத்திய வடக்கு வாசல் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. நந்தனார் நுழைந்ததால் கோவில் தீட்டுப்பட்டு விட்டது என்கிற காரணத்தைக் காட்டி அவ்வாசலை அடைத்து விட்டார்கள். அவ்வாசாலை தமிழக அரசு திறந்திட வேண்டும்.
சிவனடியார் ஆறுமுகசாமி ஆதரவாளர்கள் 34 பேரை காவல் துறை கைது செய்து வழக்குத் தொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
அத்துடன், நடராஜர் கோவிலில் காலங்காலமாக, நந்தனார் மடத்துச் சுவாமிகள் தமிழில் ஓதி சிவனை வழிபட்டு வந்துள்ளனர். அம்மடத்தைச் சார்ந்த சுவாமிகளும் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை ஓதிட அனுமதியும் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார் திருமாவளவன்.