கடையெழு வள்ளல்களுக்கு கலைக்கோட்டம்
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சித்தரித்துக் காட்டும் வகையில், கையளவில் தமிழகம்' என்ற காட்சித் திட்டம் நிறைவேற்றப்படும்.
இதில், தமிழகத்தின் அனைத்துப் பாரம்பரியக் கலைகள், இயற்கை வளம் மற்றும் உயர் தனிப் பெருமைகள் குறித்த விவரங்கள் இடம் பெறும்.
பார்வையாளர்கள் விவரங்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளும் வகையில், ஒலி-ஒளிக் காட்சி அமைப்புடன் இந்தத் திட்டம் அமையும். இந்தத் திட்டத்தின் மூலமாக, நமது சிறப்புமிக்கப் பாரம்பரியத்தை அனைவரும் அறியச் செய்து, தமிழகத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இயலும்.
தமிழகத்தில் ஈகைப் பண்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த கடையெழு வள்ளல்களின் அறச்செயல்களை கல்வெட்டாய்ப் பதிக்கும் முயற்சியாக, வல்வில் ஓரி வாழ்ந்த கொல்லிமலையில், கடையெழு வள்ளல்களின் சிலைகள் கொண்ட கலைக்கோட்டம் ஒன்று நிறுவப்படும்.
கடலுக்கடியில் மீன் காட்சியகம்:
சென்னைக்கு அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில், கடலடியில் உலகத்தரம் வாய்ந்த மீன் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாத் தலங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகளை மேம்படுத்துவதற்கென தனி நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரூ.25 கோடி மதிப்பீட்டில் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படும்.
அண்ணாவின் நூற்றாண்டு விழா:
இந்த 2009ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டாகும்.
அந்த பெருந்தகைக்கு நூற்றாண்டு விழாவினை எடுக்கும் வாய்ப்பு, ஆளுங்கட்சியாக நாம் இருக்கும் ஆண்டில் வாய்த்திருப்பதை நாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம்.
அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஓராண்டு முழுவதும் கட்சி வேறுபாடின்றி தமிழக அரசின் சார்பில் கொண்டாடுவோம். அண்ணாவின் அருமை பெருமைகளையெல்லாம் அவனிக்கு எடுத்துக் கூறுவோம் என்று கூறப்பட்டுள்ளது.