வால்பாறை மலையில் துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மலைப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் நக்சலைட்டுகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் புகுந்துள்ளதால் அங்கு தற்போது போலீஸார் அவ்வப்போது தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது சிலர் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை வனப்பகுதி கிராமங்களிலும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது நாராயணன் குடி என்ற இடத்தில் ஐந்து பேர் துப்பாக்கிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தபோது போலீஸார் கண்ணில் சிக்கினர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர். அவர்களை வால்பாறைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நக்சலைட்டுகளா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.