அண்ணா நகரை கலக்கி வந்த ரெளடி படுகொலை
சென்னை: பெண்களைக் கடத்துவது உள்பட சென்னை அண்ணா நகர் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டான்.
அண்ணா நகர் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த ரமேஷ் (50) மீது பெண் கடத்தல், கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.
இளம் பெண்களை காரில் கடத்தியதாக மட்டும் பல வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் நதியா (20) என்ற பெண்ணை காரில் கடத்திக் கொண்டு மகாபலிபுரத்திற்கு கொண்டு சென்று ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்ததார்.
இது குறித்து நதியா தந்த புகாரின்பேரில் அண்ணா நகர் போலீசார் ரமேஷை கைது செய்தனர். ஆனால் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
நிபந்தனைப்படி தினமும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு தனது நண்பர் கோழிகுமார் என்பவருடன் டாஸ்மாக் மதுக் கடை பாரில் ரமேஷ் மது அருந்தினார். கோழிகுமார் வீட்டிற்கு சென்று விட ரமேஷ் மட்டும் மதுக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அரிவாள், கத்திகளுடன் வந்த 3 பேர் கும்பல் ரமேஷை சுற்றி வளைத்து தாக்கினர். அரிவாள்களால் வெட்டி சாய்த்தனர். தலை உள்பட 15 இடங்களில் வெட்டு காயங்களுடன் ரமேஷ் அதே இடத்தில் பிணமானான்.
இதையடுத்து அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. நள்ளிரவு 12 மணிக்கு தகவல் அறிந்து வந்த போலீசார் பார் அப்போதும் திறந்ததிருந்து கண்டு அதிர்ந்தனர். வெளியே பிணம் கிடந்த நிலையிலும் பலரும் பாரில் குடித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து பாருக்குள் புகுந்த போலீசார் குடிமகன்களை விரட்டிவிட்டு கடையை மூட வைத்தனர்.
இந்தக் கொலை குறித்து ரமேஷின் மனைவி சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மகள் பூர்ணிமாவுக்கும், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததாகவும், இதை ரமேஷ் எதிர்த்ததாகவும், அந்த வாலிபரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரியவந்தது.
இதனால் ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது இதற்கு முன் ரமேஷ் செய்த பல்வேறு அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட யாராவது கூலிப் படையை வைத்து போட்டுத் தள்ளினார்களா என விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்தக் கொலை தொடர்பாக சிலரை போலீசார் வளைத்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அது குறித்து விவரங்களை வெளியிட அண்ணாநகர் துணை கமிஷனர் ஜெய கெளரி மறுத்துவிட்டார்.