அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகும்
சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையி்ல் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தமிழகத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வரும் 3 நாட்களில் பருவ மழை தீவிரமடையும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்,
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நேற்று அதிகபட்சமாக குழித்துறையில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. தக்கலையி 50 மி.மீ, நாகர்கோவில், கரூர், பரமத்தி, பேரையூர், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ,
திருச்சியில் 20 மி.மீ, திருவண்ணாமலை, கோத்தகிரி, சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 10 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம், திருமுல்லைவாயில், ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் மிக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் அந்தப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.