விழுப்புரம் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை பலி
தமிழகத்தில் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சில குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தநிலையில் விழுப்புரம் அருகே தடுப்பூசி போட்ட ஒரு குழந்தை பலியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது தாவடிப்பட்டு கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த முரளி - செல்வி தம்பதியினரின் மகன் அரிதரன். 2 மாதமே ஆகும் அரிதரனுக்கு கடந்த 3ம் தேதி சோழம்பட்டு என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது.
அதன் பின்னர் வீடு திரும்பினர். அடுத்து நாள் அரிதரனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் வலிப்பும் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உடனடியாக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினர். இதனால் குழப்பமடைந்த செல்வியும், முரளியும் குழந்தையை தூக்கிக் கொண்டு வீடு திரும்பினர். வந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் செல்வி புகார் கொடுத்தார். தடுப்பூசி போட்ட பின்னர் எனது மகனுக்கு காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து சோழம்பட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்த டாக்டரிடம் கேட்டதற்கு சரியான பதிலை அவர் சொல்லவில்லை. மேலும், பொய்குணம் கிராம செவிலியரிடம் கேட்டபோது அவரும் பதிலளிக்கவில்லை.
எனது மகனின் சாவுக்குக் காரணம் என்ன என்பதை கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் செல்வி கூறியுள்ளார்.
இதையடுத்து அரிதரனின் உடலை போலீஸார் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.