இந்து திருமணச் சட்டம்: சுப்ரீம் கோர்ட் கவலை

புதன்கிழமை, ஜூன் 18, 2008, 10:42 [IST]
டெல்லி: இந்து திருமணச் சட்டம், குடும்பங்களை இணைப்பதற்குப் பதில் பல குடும்பங்களை பிரிக்க காரணமாக அமைந்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இந்து திருமண சட்டம் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள விவாகரத்து தொடர்பான விதிகள் ஆங்கிலேய சட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.

இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் சமீபகாலமாக கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகின்றன. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் நாக்பால். இவருடைய மனைவி சுமேதா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கவுரவும், சுமேதாவும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது. ஆனால் தாயின் பொறுப்பில்தான் மகன் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து கவுரவ் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். என் மகன் என்னிடம்தான் இருக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அரிஜித் பசாயத், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய விடுமுறைகால பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பசாயத் சில கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது.

இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே விவாகரத்துக்கான முன் எச்சரிக்கை மனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள்.

கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பிரிவால் மோசமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். அதிலும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அதன் எதிர்காலம் அதிகம் பாதிக்கும். அந்த பெண் குழந்தை, திருமணத்தின் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

எனவே குழந்தைகளின் நலனை நினைத்தாவது தம்பதிகள் தங்களுடைய சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். தங்களை விட தங்கள் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம் என்று உணர வேண்டும்.

நமது முன்னோர்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டின் 4 சுவர்களுக்குள் தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இருப்பதைப் போன்ற சிக்கல்களை அவர்கள் சந்தித்தது இல்லை.

தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றார் பசாயத்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST