அக்டோபரில் நானோ கார்கள் விற்பனைக்கு வரும்: டாடா
கொல்கத்தா: டாடா மோட்டார்ஸின் ரூ. 1லட்சம் மதிப்பிலான நானோ கார்கள், அக்டோபரில் விற்பனைக்கு வரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிகாந்த் கூறியுள்ளார்.
டாடா மோட்டார்ஸின் குட்டிக்காரான நானோ தற்போது மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் தயாரிப்பில் உள்ளது. அக்டோபர்மாதம் இக்கார்கள் விற்பனைக்கு வரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிங்கூர் தயாரிப்பு பிரிவில் டாடா நானோ கார்கள் தயாரிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறு. அது முடிவடைந்தால், அக்டோபர் மாதத்தில் கார்கள்விற்பனைக்கு வரும். துர்கா பூஜையின்போது கார்கள் விற்பனைக்கு வந்து விடும்.
உற்பத்தி செலவு முதலில் ரூ. 1700 கோடியாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இது ரூ. 2,200 கோடியாக உயர்ந்து விட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி அக்டோபரில் கார்கள் சாலையில் ஓடும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நானோ கார்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவிலும் எங்களது உற்பத்திப் பிரிவுகளை நிறுவ கோரிக்கைள் எழுந்துள்ளன.
இருப்பினும் இப்போதைக்கு உள்ளூர் சந்தையில் மட்டும் (இந்தியா) தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். பின்னர் ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கவனம் செலுத்தவுள்ளோம் என்றார்.