முப்தி கட்சியின் ஆதரவு வாபஸ் - ஜம்மு-காஷ்மீர் காங். அரசு கவிழுகிறது
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
முதல்வராக குலாம் நபி ஆசாத்தும், துணை முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் முசாபர் உசேன் பெய்க்கும் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்.எல்.ஏக்களும், முப்தி கட்சிக்கு 18 பேரும் உள்ளனர். இதுதவிர 2 சிபிஎம் எம்.எல்.ஏக்கள், 8 சுயேச்சைகளும் ஆசாத் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
சமீபத்தில் அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கூட்டணி அரசு 39.88 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இது அங்கு பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. முப்தி கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வருகிற 30ம் தேதிக்குள் இந்த முடிவை ஆசாத் அரசு வாபஸ் பெறாவிட்டால் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் எனவும் அது எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முப்தி கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனால் ஆசாத் அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது.
இதுகுறித்து முப்தி கட்சியின் தலைவரும், அவரது மகளுமான மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,எங்களது கட்சி காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியுள்ளது. எங்களது கட்சியைச் சேர்ந்த நான்கு அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் குலாம் நபி ஆசாத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
அமர்நாத் கோவில் தேவஸ்தானத்துக்கு நிலம் வழங்கி பிறப்பித்த உத்தரவை 30ம் தேதிக்குள் திரும்பப் பெறவேண்டும் என கெடு விதித்திருந்தோம். ஆனால் அமர்நாத் விவகாரம் தொடர்பாக பெரும் போராட்டம் வெடித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் ஆதரவை வாபஸ் பெறுவது என்ற முடிவை எடுக்க நேரிட்டது என்றார்.
முப்தி கட்சியின் முடிவால் குலாம் நபிஆசாத்தின் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்படுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
--