கன்னியாகுமரியைச் சுற்றிப் பார்க்க கியர் சைக்கிள்கள்
கன்னியாகுமரி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமரியை பயணிகள் சுற்றிப் பார்த்து ரசிக்க வசதியாக நவீன கியர் சைக்கிள்களை வாங்கியுள்ளது தமிழக சுற்றுலாத் துறை.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு உடனடியாக திரும்பும் நிலையே உள்ளது.
குமரி மாவட்டத்திலுள்ள பிற சுற்றுலா மையங்களான வட்டக்கோட்டை, சொத்தவிலை பீச், பத்மனாபபுரம் கோட்டை, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளைப் பார்வையிடச் செல்பவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குமரியில் ஒரிரு நாட்கள் தங்கி ஏனைய சுற்றுலா தலங்களையும் பார்வையிட சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி காலை, மாலை வேளைகளில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வகையில் சைக்கிள் சுற்றுலா திட்டத்தை அமுல்படுத்த சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.
சைக்கிளில் சுற்றுலா செல்ல வசதியாக 20 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. அலாய் மெட்டலில் செய்யப்பட்ட இந்த சைக்கிள் 6 முதல் 21 கியர் வசதிகள் கொண்டதாகும்.
ஸ்டிக் பிரேக் கொண்ட இந்த சைக்கிளின் விலை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை உள்ளது. நாள் ஒன்றுக்கு (பெரியவர்களுக்கு) 300 ரூபாயும், அரை நாளுக்கு பெரியவர்களுக்கு) 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் சிறியவர்களுக்கு ரூ.30 முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 20 சைக்கிள்களில் ஆறு சைக்கிள்கள் சிறியவர்களுக்கும், 4 சைக்கிள்கள் பெண்களுக்கும், 10 சைக்கிள்கள் பெரியவர்களுக்கும் என வாங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள சைக்கிள் சுற்றுலா ஏற்கனவே கோடை வாஸ்தலமான ஏற்காடு, கொடைக்கானல், மற்றும் மாமல்லபுரத்திலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.