ஒரு ஓட்டுக்கு ரூ. 25 கோடி, அமைச்சர் பதவி: சமாஜ்வாடி எம்.பி. தகவல்
லக்னோ: காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட ஒரு எம்பிக்கு ரூ.25 கோடி ரூபாயும், மந்திரி பதவியும் அளிக்க காங்கிரஸ் முன் வந்திருப்பதாக சமாஜ்வாடி எம்பி முன்வர் ஹாசன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில் சமாஜ்வாடி கட்சிதான் மத்திய அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற காங்கிரசுக்கு இன்னும் 10 முதல் 15 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு இப்போது பெரும் யோக நேரம். எனவே அவர்களைப் பணம் மற்றும் பதவிகள் கொடுத்து வளைக்கும் திட்டத்தில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியலில் இத்தகைய குதிரை பேரங்கள் சகஜம்தான் என்றாலும், மீதமுள்ள சில மாதங்களுக்கு அரசைத் தாக்குப்பிடிக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தர முன்வந்துள்ள விலையைக் கேட்டு யாருக்கும் தலை கிறுகிறுத்துப் போகும். அதை சமாஜ்வாடி கட்சியின் அதிருப்தி எம்.பியான முனவர் பாஷா புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
முனவர் பாஷா லக்னோவில் அளித்துள்ள அதிரடி பேட்டி:
அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது. எனவே என்னைப் போன்றவர்களால் அதை ஆதரிக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் விலை கொடுத்து இதர கட்சி எம்பிக்களின் ஆதரவைப் பெற முடிவுசெய்துள்ளது.
நேற்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, ரூ.25 கோடி பணமும் மந்திரி பதவியும் அளித்தால் ஆதரவு தருவீர்களா என்று கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங்குக்கு இப்போது இதுதான் வேலை. அவரதான் எல்லாரையும் பணத்துக்கு வாங்கும் வேலையைச் செய்கிறார். என்னிடம் இதற்கு ஆதாரங்கள் உள்ளன, என்கிறார் முன்வர் பாஷா.
இவரைப் போலவே மேலும் இரு எம்பிக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.