மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு - சோனியாவையும் சந்திக்கிறார்
தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனில் அம்பானி தீவிரமாக முயன்று வருகிறார். இது தனது ரிலையன்ஸ் நிறுவனத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் முகேஷ்.
இதனால் கோபமடைந்த அனில் அம்பானி, முகேஷ் நியாயமற்றவகையில் தனது தொழிலில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் தற்போது அரசியல் புகுந்துள்ளது.
அனில் அம்பானிக்கு சமாஜ்வாடி கட்சி பெரும் ஆதரவாக உள்ளது. இது முகேஷ் அம்பானிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் அனிலை ஆதரிக்கும் சமாஜ்வாடிக்கு பெரும் நெருக்கடிையக் கொடுக்கும் வகையில், சமாஜ்வாடிக் கட்சியையே உடைக்கும் வேலையில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சோனியா காந்தியின் கவனத்திற்கு சமாஜ்வாடி கட்சி கொண்டு சென்றது. முகேஷ் அம்பானி சோனியா காந்தியின் தீவிர ஆதரவாளர் என்பதால் இதில் சோனியா தலையிட வேண்டும் என சமாஜ்வாடி கோரியது.
ஆனால் சோனியா தவறாக நினைத்தாலும் சரி, அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்படும் சமாஜ்வாடிக் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் முகேஷ் இருப்பதாககூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இன்று மாலை சோனியா காந்தியை முகேஷ் அம்பானி சந்திக்கவுள்ளார். சோனியாவின் அழைப்பின் பேரில் அவர் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது அனில் அம்பானியுடன் சமரசமாக போகுமாறும், சமாஜ்வாடியை உடைக்கும் முயற்சி வேண்டாம் என்றும் சோனியா கேட்டுக் கொள்ளலாம் என்று தெரிகிறது.
முன்னதாக, சோனியாவை சந்திப்பதற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்தது. அப்போது லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு குறித்து பிரதமரிடம் அவர் விளக்கம் கேட்டதாக கூறுகிறது.
பின்னர் அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரையும் முகேஷ் சந்தித்துப் பேசினார்.
பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டிகேஏ நாயர் ஆகியோரையும் சந்திக்கிறார் முகேஷ்.
சோனியா காந்தி - முகேஷ் அம்பானி சந்திப்பு அரசியல் அரங்கிலும், தொழில் அரங்கிலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.