நம்பிக்கை வாக்கு: எதிர்த்து வாக்களிக்க டி.ஆர். முடிவு
ஹைதராபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லோக்சபாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். நம்பர் வேட்டையில் தீவிரமாக உள்ள காங்கிரஸ், தெலுங்கானா உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தது.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று தெலுங்கானா கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்.
தெலுங்கானா தனி மாநிலம் என உறுதி அளித்து விட்டு, தெலுங்கானா மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது காங்கிரஸ் கட்சி. எனவே அக்கட்சி தலைமையிலான அரசுக்கு நாங்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டோம்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே ஆதரவாக வாக்களிப்போம்.
மத்திய அரசுக்கு ஆதரவாக டிஆர்எஸ் வாக்களிக்கும் என வீரப்ப மொய்லியும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸும் கூறியிருப்பது உண்மையல்ல. அப்படி ஒரு முடிவை நாங்கள் எடுக்கவில்லை.
எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 15ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். ஜூலை 19ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்த தீர்மானித்துள்ளோம்.
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களின் கண்களைத் திற கடவுளே என்று வேண்டி ஜூலை 15ம் தேதி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தெலுங்கானா மாவட்டங்களில் ஜூலை 16ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும். ஜூலை 17ம் தேதி காங்கிரஸ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். ஜூலை 18ம் தேதி கல்வி பந்த் நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என்றார் ராவ்.