டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப், ஊக்க மருந்து சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து நிரந்தரமாக தடை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த இந்தியன் பிரிமீயர் லீக் டுவென்டி 20 தொடரில், டெல்லி அணியில் இடம் பெற்றிருந்தார் ஆசிப். போட்டியின் போது குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரி எடுக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியிடம் (வாடா) சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வந்துள்ளது. அதில் ஆசியாவைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இதை ஐபிஎல் தலைவரும், கமிஷனருமான லலித் மோடி உறுதிப்படுத்தினார். ஆனால் வீரர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அது ஆசிப்பாகத்தான் இருக்க முடியும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. தற்போது அது ஆசிப்தான் என உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாடா அனுப்பியுள்ள விவரங்கள் மூலம் அது முகம்மது ஆசிப்தான் என்பது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஊக்க மருந்து உட்கொண்டு சிக்கி தடை விதிக்கப்பட்டவர் ஆசிப். பின்னர் அந்தத் தடையிலிருந்து அவர் மீண்டு வந்தார். ஐபிஎல் தொடரை முடித்து விட்டு அவர் பாகிஸ்தான் திரும்பியபோது, துபாயில், ஓபியத்துடன் வந்ததாக பிடிபட்டார். இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கிய ஆசிப் தற்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆசிப் நிரந்தரமாக தடை விதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.