நாளை தஞ்சையில் அரசு கேபிள் டிவி தொடக்கம்
தஞ்சாவூர்: தஞ்சையில் நாளை அரசு கேபிள் டிவி தொடங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 60 சேனல்கள் ஒளிபரப்பப்படும் என்று தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பிரிஜேஷ்வர் சிங் கூறியுள்ளார்.
நாளை தஞ்சை மண்டல அரசு கேபிள் டிவி தொடக்க விழா நடைபெறுகிறது. சென்னையிலிருந்தபடி அரசு கேபிள் டிவியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பான பணிகளுக்காக நேற்று பிரிஜேஷ்வர் சிங் தஞ்சை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு கேபிள் டிவிக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தொடக்கத்தில் மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கப்பட்டாலும் படிப்படியாக அனைத்து கிராமங்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு கிடைக்கும்.
எம்.எஸ்.ஓ.க்கள், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்.
தஞ்சை கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் திருசத்சி, திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய நான்கு மாவட்ட மக்களும் பயன் அடைவர். மாதக் கட்டணமாக ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் 60 சேனல்கள் வரையிலும் பின்னர் 70 ஆகவும், பின்னர் அதிகரிப்பது குறித்தும் எம்.எஸ்.ஓக்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றார் சிங்.