கச்சத்தீவு ஒப்பந்தத்தை கிழித்துப் போடுங்கள்: விஜயகாந்த் ஆவேசம்
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையைக் கண்டித்தும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் ராமேஸ்வரத்தில் தேமுதிக சார்பில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் விஜயகாந்த் தலைமையில் நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார். கச்சத்தீவை மீட்க வேண்டும். அது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களை இலங்கை மதிக்கவில்லை. எனவே அதை மதிக்கக்கூடாது, ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டு விட்டு நமது மீனவர்களைக் காக்க வேண்டும் என்று அவர் கோபமாக கூறினார்.
விஜயகாந்த் பேசுகையில், அப்பாவி மீனவர்களின் உயிர்களைக் காக்க இதுவரை இருந்து வந்த திராவிட அரசுகள் தவறி விட்டன.
திமுக அரசும் சரி, இதற்கு முன்பு இருந்த அதிமுக அரசுகளும் சரி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண தவறி விட்டன.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காணும் வரை அணு சக்தி ஒப்பந்தத்தில் மத்திய அரசுக்கு திமுக அரசு ஆதரவளிக்கக் கூடாது.
திமுக அரசுக்கு உண்மையிலேயே மீனவர்கள் குறித்து அக்கறை, கவலை இருக்குமானால், உடனடியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து அது வெளியேற வேண்டும்.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும். தமிழக மீனவர்களின் நலன், வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும்.
அவர்கள் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. பிறகு நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும், ஒப்பந்தத்தை கிழிச்சுப் போடுங்க. மீனவர்களை காப்பாற்றுங்க.
இலங்கை கடற்படை தொடர்ந்து அடாவடியாக, ஆணவத்தோடு நடந்துவருகிறது. தேமுதிக ஆட்சிக்கு வருமானால், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த் தலைமையில் நடந்த போராட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.