For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியின் சுயநலம்-சரத்குமார், தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்

By Staff
Google Oneindia Tamil News

Sathyaraj
சென்னை: தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்.

தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்:

ரஜினியின் வருத்தம் குறித்து சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.

என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.

பரந்த மனப்பான்மை-பாரதிராஜா:

இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

நியாயம்தான்-கலைப்புலி சேகரன்:

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்றார்.

இந்து மக்கள் கட்சி கண்டனம்:

இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினைக்காக தமிழ் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.

ஆனால் இன்றோ தனது குசேலன் படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுவோ என்ற அச்சத்தில் கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன் என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.

தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுவோ என்று அவர் அச்சப்படுகிறார்.

உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ஆவேசமாக கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதித்த வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X