படாவி அரசு அடுத்த மாதம் கவிழும்: அன்வர் இப்ராகிம்
சமீபத்தில்தான் சிறுவனை மயக்கி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் அன்வர் இப்ராகிம்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செப்டம்பர் 16ம் தேதிக்குள் படாவி அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் படாவி அரசு அந்த தேதிக்குள் கவிழ்ந்து விடும் என்று நம்புகிறோம்.
மார்ச் 8ம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், எதிர்க்கட்சிகள் வலுவான நிலையை அடைந்துள்ளன. எனவே திட்டமிட்டபடி படாவி அரசை கவிழ்த்து விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஆளுங்கட்சியிலிருந்து பல எம்.பிக்கள் எதிர்க்கட்சி வரிசைக்கு தாவத் தயாராக உள்ளனர். தற்போது ஆளுங்கூட்டணிக்கு 30 எம்.பிக்களே கூடுதலாக உள்ளனர்.
எனவே ஆளுங்கூட்டணியை உடைத்து அதை சிறுபான்மை அரசாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அன்வர்.
அன்வரின் பேட்டியால் மலேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.