நெல்லை பள்ளியில் வெடிகுண்டு புரளி
நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இதனால் மற்ற பள்ளிகளிலும் பதட்டம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ளது குழந்தை ஏசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
தகவறிந்த போலீசார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தகவல் அப்பகுதி முழுக்க வேகமாக பரவியது. இதனால் கலக்கமடைந்த பெற்றோர் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் எதுவும் வரவில்லை என்று மற்ற பள்ளிகள் தெரிவித்தும் பெற்றோர் அதை கண்டு கொள்ளவில்லை. குழந்தைகள் அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.