தமிழகத்துக்கு மத்திய அரசு 600 மெகாவாட் மின்சாரம்
டெல்லி: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் ஷிண்டே, சந்தோஷ் ஆகியோருடன் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த கூடுதல் மின்சாரம் கிடைத்துள்ளது.
சென்னையில் பகலில் ஒன்றரை மணி நேரமும், புறநகர் பகுதிகளில் தினமும் 3 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது. தமிழகத்தின் பகுதிகளில் 5 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
இந்த அறிவிக்கப்பட்ட மின்வெட்டு தவிர அவ்வப்போது மணிக்கணக்கில் மின்சாரம் தடைபட்டு வருவதால் தமிழகமே அவ்வப்போது தவித்து வருகிறது.
மேலும் தொழில்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனங்கள் ஜெனரேட்டர்களை இயக்க டீசலை மொத்தமாக வாங்கி வருவதால் செயின் ரீயாக்ஷன் போல டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கோரி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி விரைந்தார்.
மின் வாரியத் தலைவர் மச்சேந்திரநாதனுடன் சென்ற அவர் மத்திய மின்சார துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் நிலக்கரி துறை இணையமைச்சர் சந்தோஷ் பக்ருடியா ஆகியோரை சந்தித்து தமிழக நிலைமையை விவரித்தனர்.
உடனடியாக தமிழகத்துக்கு 500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்குமாறு கோரினர். ஆனால், பல்வேறு மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு இருப்பதால் 500 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இல்லை என்று கூறிய ஷிண்டே, தமிழகத்துக்கு அதிகபட்சம் 300 மெகாவாட் தருவதாக உறுதியளித்தார்.
சந்தோஷ் பக்ருடியாவுடன் பேசிய வீராசாமி நெய்வேலி நிலக்கரி மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, உடனடியாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க பக்ருடியா உத்தரவிட்டார்.
மேலும் 10ம் தேதி முதல் தமிழ்நாட்டுக்கு மேலும் 200 மெகாவாட் மின்சாரம் அளிக்கவும் பக்ருடியா ஒப்புக் கொண்டார்.
இதன்மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. இதனால் மின்தட்டுப்பாடு பெருமளவில் குறையும் எனத் தெரிகிறது.
அமைச்சர்களை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய வீராசாமி,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதாலும் காற்றாலை மின் உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டதாலும் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சாரம் அளிக்க அமைச்சர் ஷிண்டே ஒப்புக் கொண்டு உத்தரவிட்டார்.
அதன்படி, தேசிய அனல் மின் கழகத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரமும், மின் வர்த்தக கழகத்தில் (பவர் டிரேடிங் கார்ப்பரேசன்) இருந்து 200 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்துக்கு வழங்கப்படும். இந்த 300 மெகாவாட் மின்சாரமும் வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும்.
மின் வர்த்தக கழகத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் செலவாகும். எனினும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய விலையிலேயே மாநில அரசு தொடர்ந்து மின்சாரம் வழங்கும்.
தேசிய அனல் மின் கழகத்திடம் பேச்சு நடத்தி மேலும் கூடுதலாக மின்சாரம் பெறுவதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் இருந்து நேற்று இரவு முதலே 100 மெகாவாட் கூடுதல் மின்சாரம் அளிக்க அமைச்சர் சந்தோஷ் உத்தரவிட்டார்.
இது தவிர, வரும் 10ம்ந் தேதி முதல், மேலும் 200 மெகாவாட் மின்சாரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். இதனால், தமிழகத்துக்கு மொத்தம் 600 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்.
அடுத்த 3 மாதங்களில், கூடங்குளத்தில் அணுஉலை திட்டம் தொடங்கப்பட்டதும் 468 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும். அதன் பிறகு மின் தட்டுப்பாடே தமிழகத்தில் இருக்காது. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க மிகப்பெரிய மின் திட்டங்களுக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும்.
தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க டீசலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசலை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆற்காடு.