தினத்தந்தி, தினகரன் மும்பை பதிப்புகள் தொடக்கம்
மும்பை: தமிழின் முன்னணி நாளிதழ்களான தினத்தந்தி மற்றும் தினகரன் ஆகியவற்றின் மும்பை பதிப்புகள் இன்று தொடங்கப்பட்டன.
தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி தனது மும்பை பதிப்பு குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தினகரனும் தான் மும்பையில் பதிப்பை தொடங்குவதாக அறிவித்தது.
இரு நாளிதழ்களும் இனறு தங்களது மும்பை பதிப்புகளைத் தொடங்கின.
தினத்தந்திக்கு இது 15வது பதிப்பாகும். தினகரனுக்கு இது 11வது பதிப்பாகும். இரு நாளிதழ்களும் அனைத்து பக்கங்களையும் வண்ணத்தில் தருவதாக அறிவித்துள்ளன.
தந்திக்கு கருணாநிதி வாழ்த்து
தினத்தந்தியின் மும்பை பதிப்புக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் படித்து பக்கம் நின்று கேட்டு பொது அறிவை - நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள, அறிவு வளர்ச்சிக்குத் துணை புரிய உதவி, அவர்களின் வாழ்வோடு ஒன்றிக் கலந்துள்ள செய்தித் தாள் தினத்தந்தி என்பதை எல்லோரும் அறிவர்.
தமிழர் நலம் நாடி உழைத்து, தமிழர் தந்தை எனப் பலராலும் பாராட்டிப் போற்றப்பட்ட பெருந்தகை சி.பா. ஆதித்தனார் அவர்கள் உருவாக்கி வளர்த்த தினத்தந்தி நாளிதழ், அவரது அருமை மைந்தர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களால் பேணி வளர்க்கப்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை, பெங்களூரு உள்பட 14 இடங்களில் பதிப்பிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்ச் சமுதாய மக்களுக்குப் பெரிதும் தொண்டாற்றி வருகிறது.
அதன் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முத்திரைக் களமாக 15வது பதிப்பு மும்பையிலிருந்து 5.9.2008 முதல் வெளி வருவது பெருமைக்குரியது. மிகுந்த பாராட்டுக்குரியது.
மராட்டிய மாநில வாழ் தமிழ் மக்களின் மொழி, இன உணர்வுகளுக்கு இந்த 15வது மும்பைப் பதிப்பு பாலமாகத் திகழ்ந்து வெற்றி குவித்திட என் உளமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.