பொதுச் செயலர் தேர்தல்: ஜெ.வுக்காக தொண்டர்கள் வேட்பு மனு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஏராளமான தொண்டர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கடந்த தேர்தல் 10.9.2003ம் ஆண்டு நடைபெற்றது. 5 ஆண்டுகள் முடிவடைவதையொட்டி, வரும் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையராக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் முடிவடைகிறது. மறுநாள் 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
வேட்புமனு தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கினாலும், நேற்று முன்தினம் வரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டனர்.
ஜெயலலிதா போட்டியிடுவதற்காக மதியம் 1.10 மணிக்கு அவர்கள் மனுதாக்கல் செய்தனர். அவைத்தலைவர் மதுசூதனன் முன்மொழிய, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் ஆகியோர் வழிமொழிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், டி.ஜெயகுமார் எம்எல்ஏ, தேர்தல் பிரிவு செயலாளர் தம்பி துரை, அமைப்பு செயலாளர்கள் பி.எச்.பாண்டியன், சுலோச்சனா சம்பத், வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பா.வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன், சே.ம.வேலுச்சாமி, நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இதனால் அதிமுக பொதுசெயலாளராக 6வது முறையாக ஜெயலலிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.