ஸ்பென்சர் பிளாசாவில் தீவிபத்து - ரூ. 25 லட்சம் சேதம்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸைத் தொடர்ந்து இன்னொரு பிரமாண்ட வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில் நேற்று இரவு திடீர் தீவிபத்து நடந்தது. இதில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் தீயில் கருகின.
சரவணா ஸ்டோர்ஸ் தீவிபத்தின் பாதிப்பே இன்னும் மக்கள் மனதிலிருந்து விலகாத நிலையில், நேற்று இரவு ஸ்பென்சர் பிளாசாவில் தீவிபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவின் முதல் மாடியில் ஷோல்டர்ஸ் என்ற ரெடிமேட் துணிக் கடை உள்ளது. இங்கு நேற்று கடை மூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து கடையை மூடி விட்டு அனைவரும் கிளம்பி விட்டனர். ஆனால் ஜெனரேட்டரை ஆஃப் செய்ய மறந்து விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் மின்சாரம் வந்தபோது மின்கசிவு ஏற்பட்டு அந்தக் கடையில், தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. அக்கம் பக்கத்து கடைகளுக்கும் தீ பரவுவதற்கு முன்பு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து தீவிபத்ைத முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து போய் விட்டன.
ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில், தீயணைப்புக் கருவிகள் முழு அளவில் பொருத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக நேற்று ஏற்பட்ட தீயை உடனடியாக அணைக்க முடிந்தது, பெரும் நாசம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.