'லாக்-அப்' சாவு: கலெக்டருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விளக்கம் அளிக்க கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நரிப்பாறையைச் சேர்ந்த ராஜு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது சகோதரர் துரைசிங்கத்தை கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் துறையினர் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக அழைத்துச் சென்றனர். அவரை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் துன்புறுத்தியதில் அவர் இறந்துள்ளார். ஆனால், சாலையில் துரைசிங்கம் மயங்கி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் போலீசார் பொய் கூறுகின்றனர்.
துரைசிங்கம் மரணம் குறித்து உறவினர்கள் யாருக்கும் போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், துரைசிங்கத்தின் உடலை அவசர அவசரமாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உடலை வலுக்கட்டாயமாக உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியிலும் போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். துரைசிங்கத்தின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, டிஎஸ்பி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, டிஎஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மறு உத்தரவு வரும் வரை துரைசிங்கத்தின் உடலை பிணவறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.