மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
நாகப்பட்டனம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் இதற்கு கடும் கண்டனமும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.
இதையடுத்து கொழும்பு சார்க் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இனிமேல் இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்றும் மத்திய அரசு தரப்பில், தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர்அங்கு வந்தனர். தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதையடுத்து மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.ஆனால் குழந்தைவேலு என்ற மீனவர் மட்டும் குண்டுக் காயம் பட்டு படகில் விழுந்து விட்டார்.
பின்னர் கடற்படையினர் போய் விட்டனர். அதன் பின்னர் இன்று காலை 6 மீனவர்களும் கடும் சிரமப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தனர். மீனவர் குழந்தைவேலு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.