கருணாநிதி பெயரில் கல்லூரி தொடங்கிய அமைச்சர்
கோவை: தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முதல்வர் கருணாநிதி பெயரில் கோவையில் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
கோவை கண்ணம்பாளையத்தில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரியைத் தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய பொங்கலூர் பழனிச்சாமி, எனது மனைவி விஜயலட்சுமியின் கனவை நனவாக்கும் வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நல்ல தரமான கல்வியை அளித்து, அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதே எங்களது நோக்கமாகும்.
கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, உலகதரம் வாய்ந்த கல்லூரியாக இதை மாற்றுவோம். இப்போது கல்லூரியில் 240 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். கல்வி கட்டணம் செலுத்த வங்கிகளை நம்பியுள்ள மாணவர்களுக்கு விரைவில் கல்லூரியில் லோன் மேளா நடத்தப்படும்.
கல்வி சேவை ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட உள்ள கல்லூரியில் அரசியல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த கல்லூரி கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்றார் அவர்.