ரமளான் நோண்புக்காக மின் தடை நேரத்தில் மாற்றம்: பொன்முடி
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரமளான் நோன்புக்கு இடையூறாக இருப்பதால் முஸ்லிம்களின் வேண்டுகோளை ஏற்று மின்தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், நண்பகல் 3 மணி முதல் 6 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையுமான 5 மணி நேர மின்தடை அமலில் உள்ளது.
முஸ்லிம் மக்கள் இந்த மின்தடை நேரம் நோன்புக்கு இடையூறாக இருப்பதாக கூறி இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மின்வெட்டு நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக பொன்முடி அறிவித்தார்.
இதன்படி அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரையும், இரவு 9 மணி முதல் 10 மணிவரையும் மின்வெட்டு இருக்காது. அதற்கு பதிலாக நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும். பகலில் 3 மணி முதல் 6 மணிவரையிலான மின்வெட்டு பகல் 2 மணி முதல் 5 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு நேர மாற்றம் மின்துறை அமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்முடி தெரிவித்தார்.
முஸ்லிம்களின் நோன்புக்கு வசதியாக மின்வெட்டு நேரம் மாற்றி அமைக்கப்பட்டதற்கு விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஐமாஅத் பாராட்டு தெரிவித்துள்ளது.
அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ், கே.எம்.ஷேக்தாவூத், எம்.கே.ஷாகுல்அமீது உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்