அணு சோதனை நடத்த மாட்டோம் என இந்தியா உறுதி: யு.எஸ்.
{image-Robert Wood250_05092008.jpg tamil.oneindia.com}வாஷிங்டன்: 123 ஒப்பந்தத்தின் கீழ், அணு குண்டு சோதனை நடத்த மாட்டோம் என இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா விளக்கியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சை வலுத்துள்ளது.
இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால் உடனடியாக அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விடும் என இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக புஷ் நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்த உரிமை உண்டு. அதேபோல அதுகுறித்து ரியாக்ட் செய்ய அமெரிக்காவுக்கும் உரிமை உண்டு என்று குழப்பமான பதிலைக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், அணு ஆயுத சோதனையை நடத்த மாட்டோம் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக அமெரிக்கா தற்போது விளக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்துவதில்லை என்ற உறுதியை எடுத்துள்ளது.
123 ஒப்பந்தத்தின் கீழும் அதுகுறித்து உறுதிமொழியை தெரிவித்துள்ளது. அதை இந்தியர்கள் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறோம்.
அமெரிக்க - இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் ஷரத்துப்படி, இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால், அணு எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் நிறுத்தி வைக்கப்படும். அமெரிக்கா மட்டுமல்லாது பிற நாடுகளும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி எம்.பி. டாம் லான்டோஸ் கேட்ட கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அனுப்பிய பதில் கடிதத்தில் புதிதாக எதுவும் இடம் பெறவில்லை. அமெரிக்காவின் அணு ஆயுத ஒழிப்புக் கொள்கையின் மறு வலியுறுத்தலே அந்தப் பதில்.
இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் என்ன நடக்கும் என்று கேட்டால், ஊகத்திற்குப் பதிலளிக்க இப்போது நான் விரும்பவில்லை. இந்தியா தனது உறுதிமொழியை மீறாது என்று நாங்கள் நம்புகிறோம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் என்றார் உட்.
ராபர்ட் உட் பேட்டியின் மூலம் இந்தியாவே, அணு ஆயுத சோதனையை நடத்த மாட்டோம் என அமெரிக்காவிடம் உறுதிமொழி அளித்துள்ளதாக தெரிகிறது. இது இந்தியாவில் மேலும் சர்ச்சையை எழுப்பும் என்று தெரிகிறது.