என்.எஸ்.ஜியில் தொடர்ந்து இழுபறி - மேலும் மேலும் நிபந்தனைகள்
{image-iaea-head quarters250_05092008.jpg tamil.oneindia.com}வியன்னா: என்.எஸ்.ஜி கூட்டத்தில் இந்தியாவுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் நிலையான முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால் உடனடியாக அணு ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற அம்சத்தை நிபந்தனையாக சேர்க்க வேண்டும் என சில நாடுகள் வலியுறுத்தியுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
அணு வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, நிபந்தனையற்ற சலுகைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக என்.எஸ்.ஜி. கூட்டம் வியன்னாவில் நேற்று தொடங்கியது.
மேலும் சில திருத்தங்கள் சேர்ப்பு
அப்போது உறுப்பு நாடுகளிடம் இந்தியாவின் திருத்த வரைவறிக்கை சுற்றுக்கு விடப்பட்டது. இந்த வரைவறிக்கையில், பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என சில உறுப்பு நாடுகள் கோரியதால், அதற்கேற்ப சில திருத்தங்கள் கடைசி நேரத்தில் செய்யப்பட்டது.
அதன்படி, உலகளாவிய அணு வர்த்தகத்தில் என்.எஸ்.ஜியின் விதிமுறைகளுக்கேற்ப இந்தியா நடக்கிறதா, அதை பின்பற்றுகிறதா என்பதை அவ்வப்போது உறுப்பு நாடுகளிடம் என்.எஸ்.ஜி. தலைமை நாடு தெரிவிக்க வேண்டும்.
முதலில் இந்த நிபந்தனைக்கு இந்தியா எதிர்ப்பு ெதரிவித்திருந்தது. ஆனால் தற்போது அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த எதிர்ப்பு நிலையிலிருந்து இந்தியா இறங்கி வந்துள்ளது.
நிலையான முன்னேற்றம்- யு.எஸ்.:
இதற்கிடையே, நேற்று தொடங்கிய என்.எஸ்.ஜி. கூட்டத்தில் முன்னேற்ற நிலை காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், இந்தியாவுக்கு அளிக்கும் சலுகைகள் நிச்சயம் அணு ஆயுத ஒழிப்புக்கு பயன்படும், உதவிகரமாக இருக்கும்.
இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக சக்தியும் உலக சந்தையில் இணைந்து நடை போட வழி ஏற்படும்.
இந்த கோணத்தில் தற்போது நிலையான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். இது தொடர பாடுபடுவோம் என்றார்.
புதுப் புது நிபந்தனைகள்:
இருப்பினும் என்.எஸ்.ஜியில் புதுப் புது நிபந்தனைகள் பரிந்துரைக்கப்பட்டு வருவதால் இந்தியாவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
நேற்று புதிய கோரிக்கையை சில நாடுகள் எழுப்பின. அதன்படி இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால், உடனடியாக அணு ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்பது. இதே நிபந்தனையைத்தான் அமெரிக்க அரசு ரகசியமாக இந்தியாவுக்கு போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்.எஸ்.ஜி வழங்கும் சலுகைகளை இந்தியா தனது ராணுவத்திற்கு பயன்படுத்தக் கூடும் என்பது இந்த நாடுகளின் கவலை. வழக்க் போல நியூசிலாந்து, ஆஸ்திரியா, நார்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள்தான் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா தயாரித்துக் கொடுத்துள்ள இந்தியாவின் திருத்த வரைவறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் இந்த நாடுகள் கூறியுள்ளன.
முதல் நாள் கூட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இல்லை என்றே கூற வேண்டும். பல நாடுகள் தொடர்ந்து திருத்த வரைவறிக்கை சரியில்லை என்று கூறியுள்ளன. இதனால் தொடர்ந்து இழுபறி நிலையே காணப்படுகிறது.