புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு: பசுமைத் தாயகத்தின் விழிப்புணர்வுப் பிரசாரம்
சென்னை: புகையிலையின் தீங்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
காந்தி ஜெயந்தியான இன்று முதல் நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி சென்னையில் இன்று பசுமைத் தாயகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் விழிப்புணர்வுப் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை அன்புமணி பொதுமக்களிடம் விநியோகித்தார்.
ராஜ்பவனில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஆளுநர் பர்னாலா விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பிரசாரத்தில் கலந்து கொண்டவர்கள், புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை விளக்கும் பேனர்கள், பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.
பின்னர் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, அங்கு பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை விளக்கினார்.