15ம் தேதி ஜிப்மரை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் கலாம்
புதுச்சேரி: புகழ் பெற்ற ஜிப்மர் மருத்துவமனை அக்டோபர் 15ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜிப்மரை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
கடந்த ஜூலை 14ம் தேதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, தனிச் சட்டம் மூலம் ஜிப்மர் மாற்றப்பட்டது. இதையடுத்து ஜிப்மரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கவுள்ளார்.
இதுகுறித்து பாமக நாடாளுமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அன்றைய தினம் ரூ. 93.04 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடம், ரூ. 13 கோடியில் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, ரூ. 9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் ஆகியவற்றையும் அப்துல் கலாம் தொடங்கி வைக்கிறார்.
விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார், மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சுகாதார அமைச்சர் வல்சராஜ் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
2011ம் ஆண்டு எடுக்கப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரியாக மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் அக்டோபர் 20ம் தேதி தேசிய அளவிலான மாநாட்டை பாமக நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாமக அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேரியிலிருந்து இந்த மாநாட்டில் 100 பாமகவினர் கலந்து கொள்வார்கள் என்றார்.