பாலகிருஷ்ணாவின் யுவ கர்ஜனை: புத்துணர்ச்சி பெற்ற தெலுங்கு தேசம்
ஐதராபாத்: நடிகர் பாலகிருஷ்ணாவின் வருகையால் தெலுங்கு தேசம் கட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியால் தெலுங்கு தேசம் கட்சி சற்று மிரட்சிக்குள்ளாகியிருந்தது.
இந்த நேரத்தில்தான் தெலுங்குதேசம் கட்சியை நிறுவிய என்டி ராமாராவின் மகனும், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான பாலகிருஷ்ணா தனது அரசியல் பிரவேசத்தை மிகப் பிரமாண்ட முறையில் அறிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சமீபத்தில் கூட்டப்பட்ட யுவ கர்ஜனை மாநாட்டில் பாலகிருஷ்ணா தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு திரண்டிருந்த மக்கள் எண்ணிக்கை, சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது திருப்பதியில் கூடியதைவிட அதிகம் என வியக்கிறார்கள் ஆந்திர மக்கள்.
பாலகிருஷ்ணாவின் அரசியல் பிரவேசம்தான் இப்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கே அவர் வருகை புது தெம்பைக் கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாலகிருஷ்ணாவின் வருகை நிச்சயம் சிரஞ்சீவி கட்சிக்கு பெரும் நெருக்கடிதான் என்றும், வரும் தேர்தலில் உண்மையான மோதல் பாலகிருஷ்ணாவுக்கு சிரஞ்சீவிக்கும் இடையில்தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றன மீடியா வட்டாரங்கள்.