தேர்தல் அதிகாரியை மிரட்டிய ம.பி. அமைச்சர் கைது
தேவாஸ்: மத்தியப் பிரதேசத்தில் பெண் தேர்தல் அதிகாரி மீது விண்ணப்ப படிவத்தை தூக்கி வீசி மிரட்டலில் ஈடுபட்ட பாஜக மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள துகோஜி ராவ் பவார் தனது கட்சியைச் சேர்ந்த சன்கட்சி தொகுதி வேட்பாளர் பூல்சந்த் வர்மாவுடன் தேர்தல் அதிகாரி சஞ்சனா ஜெயினை சந்திக்கச் சென்றார்.
சஞ்சனாவிடம் பேசிய அமைச்சர், எதிர்க் கட்சி வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த சஜ்ஜன் சிங் வர்மா விணணப்பப் படிவத்தை முறையாக தாக்கல் செய்யவில்லை, எனவே அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், எல்லாம் முறையாகவே நடந்துள்ளது என சஞ்சனா கூறவே அவர் மீது விண்ணப்ப படிவ பேப்பர்களை தூக்கி வீசி, நீ எந்த ஊரைச் சேர்ந்தவள், உன்னை வேலை விட்டு தூக்கிவிடுவேன் என மிரட்டினார்.
கூட இருந்த பாஜக வேட்பாளர் பூல்சந்தும் சேர்ந்து கொண்டு, காங்கிரஸ் வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யாவிட்டால் நடப்பதே வேறு என்று ஓவராகப் பேசினார்.
சஞ்சனா சுற்றுலாத்துறையில் வேலை பார்க்கும் அதிகாரி என்பதால் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில் மிரட்டிப் பார்த்தார் துகோஜி. ஆனால், அந்த மிரட்டலுக்கு சஞ்சனா பணியவில்லை.
இந்த மிரட்டல், உருட்டல் அனைத்தும் தேர்தல் ஆணையம் அந்த அறையில் வைத்திருந்த கேமராவில் முழுமையாகப் பதிவானது.
இதையடுத்து அமைச்சரின் மிரட்டல் குறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு சஞ்சனா புகார் தந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் துகோஜி, பூல்சந்த் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், ஆளும் பாஜக அரசு தனது அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டருக்கு தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கவே அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது ஆகிய குற்றங்களின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யாமல் அமைச்சரையும் பாஜக வேட்பாளரையும் காப்பாற்ற முயன்ற தேவாஸ் மாவட்ட கலெக்டர் நவீன் மோகன் கோத்தாரியே தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பாஜக அமைச்சரின் கைது மத்தியப் பிரதேசத்தி்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.