இந்தியாவுடனா உறவு முக்கியம் - மன்மோகனிடம் ஓபாமா பேச்சு
அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ள பாரக் ஓபாமா, வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் மெத்வதேவ், பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆனால் நமது பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேசாமல் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இந்தியாவை, ஓபாமா முக்கியமாக கருதவில்லை என்று பேச்சு எழுந்தது. ஆனால் தன்னுடன் பேச ஓபாமா முயன்றதாகவும், தான் கத்தார், ஏமன் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்ததால் பேச முடியவில்லை என்று கூறி பிரதமர் மன்மோகன் சிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை எட்டரை மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓபாமா தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பிரதமரிடம் ஓபாமா பேசுகையில், இந்திய - அமெரிக்க உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு உறவுகளும் மேலும் வலுவடைய வேண்டும்.
அனைத்து உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியாவுடன் இணைந்து புதிய அமெரிக்க நிர்வாகம் செயல்படும் என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், உங்களது வெற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு விடியலாக அமையும் என்றார்.