விசா மோசடி: தலைமறைவான 3 சரவண பவன் ஊழியர்கள் கைது
சென்னை: போலி விசா மோசடி தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த 3 சரவண பவன் ஊழியர்கள் கைதாகியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு போலி விசா மூலம் ஆட்களை கடத்த முயன்றதாக கூறி பிரபல ஹோட்டல் அதிபர் சரவண பவன் ராஜகோபாலின் மகன் சிவக்குமாரும், சரவண பவன் ஊழியர் ராமுவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல தயாராக இருந்த சுப்ரமணி, ஆசைத்தம்பி, சேகர் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இவர்களைப் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஆசைத்தம்பியும், சுப்ரமணியும் கோர்ட்டில் சரணடைந்தனர். சேகர் இன்று கைது செய்யப்பட்டார்.
3 பேரையும் போலீஸார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன - கூடுதல் டிஜிபி
இதற்கிடையே, போலி விசா மோசடியில் சிவக்குமாருக்கு உள்ள தொடர்புகள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்களது நிறுவனத்தில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவை உபயோகமாக உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு, தேவைப்பட்டால் அவர்களை கஸ்டடியில் எடுப்போம் என்றார்.