மின்வெட்டைக் கண்டித்து அதிமுக, மதிமுக, சிபிஎம் வெளிநடப்பு
சென்னை: மின்வெட்டு தொடர்பாக கொடுக்கப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அதிமுக, மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அரசினர் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து எழுந்த அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன், மின்வெட்டு தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஆவுடையப்பன், நாளைக்கு இந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு வெளியேறினர்.
இவர்களைத் தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.