இல.கணேசன், ராம. கோபாலனுக்கு கொலை மிரட்டல்
சென்னை: பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம. கோபாலனின் உதவியாளர் ரவிக்குமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில், 7.11.2008 அன்று தேதியிட்ட ஒரு கடிதம் இந்து முன்னணி அலுவலகத்திற்கு வந்துள்ளது. அதில், இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி சென்னை அலுவலகங்கள் என்று மேல் அட்டையில் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தின் உள்ளே 2 கடிதங்கள் உள்ளன. முதல் கடிதத்தில், மயிலாடுதுறை காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் மசூதி கட்டக் கூடாது என இல.கணேசன் அளித்திருந்த பத்திரிக்கைப் பேட்டியின் நகல் இணைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஒழிக என எழுதப்பட்டிருந்தது. மேலும், ராம.கோபாலன், இல.கணேசன் மற்றும் பிற இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.
இன்னொரு கடிதத்தில், மாவட்டந்தோறும் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மிரட்டலுக்குள்ளாகியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ரவிக்குமார் புகாரில் கூறியிருந்தார்.